சென்னை : இலவச வேட்டி - சேலை திட்டத்தில் 21 கோடியே 31 லட்சம் முறைகேடு நடந்திருப்பது, தொடர்பாக கைத்தறித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, ஏழை எளிய மக்களுக்கு ஒரு கோடியே 25 லட்சம் இலவச வேட்டி-சேலை உற்பத்தி செய்வதற்கான நூல்களை, தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது. இதில் ஒரு சேலை நெசவு செய்ய 260 கூலியாக வழங்கப்படுகிறது.இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த முத்தூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கூறியிருப்பதாவது: இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்வதற்காக தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை நூலை கொள்முதல் செய்து கொடுத்துள்ளது.
அவை தரம் குறைந்த நூல்கள் என்பதால், ஒரு நாளைக்கு 6 சேலைகள் நெய்யப்படும் நிலையில், தரம் குறைந்த நூல்களை வழங்கியதால் ஒரு நாளைக்கு 3 சேலைகளை மட்டுமே நெய்ய முடிகிறது. ஒரு சேலைக்கு 260 கூலியாக வழங்கப்படுகிறது. இதனால் தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், தரம் குறைந்த நூல்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்ததன் மூலம், 21 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 250 அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே இதுதொடர்பாக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் ஜவுளி துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு மனு அளிக்கப்பட்டது. இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தங்கள் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும். என்று மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.